ஈரோடு: ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் கூடிய மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தமிழ் மாதங்களில் ஆடி மாதம் என்பது முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதிலும் குறிப்பாக ஈரோடு மாவட்டம் பவானியில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுதநதி ஆகிய 3 நதிகள் சங்கமிப்பதாக கூறப்படும் பவானி கூடுதுறையில் ஆண்டு தோறும் ஆடிமாதம் வரக்கூடிய அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாகி வருகிறது.
அதன்படி இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று காலை முதல் பவானி, காவிரி சங்கமிக்கக்கூடிய நதியில் புனித நீராடி படித்துறையில் பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்தும், காய்கறிகள், பழங்கள், படையலிட்டும் பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். காவிரியில் நீராடி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு நடத்தியும் வருகின்றனர்.
மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். இது போன்ற வழிபாடு நடத்துவதன் மூலமாக குடும்பத்தின் நலம் பெருகும் என்பது இவர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதன் மூலமாக அவர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் , குடும்பத்தின் நலம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனடிப்படையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டு சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி அம்மா மண்டபத்தில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள்
தைமாதம், ஆடிமாதம் புரட்டாசி மாதம் ஆகிய மூன்று மாதங்கள் வரக்கூடிய அமாவாசை முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க உகந்தமாக கருதப்படுகிறது. இந்த வருடம் ஆடி அமாவாசையான இன்று திருச்சி, ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் காவிரியாறு படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க குவிந்துள்ளனர்.
திருச்சியை மட்டுமல்லாது திருச்சியை சுற்றியுள்ள அரியலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் அம்மாமண்டபம் காவிரி ஆற்றுபடித்துறையில் குவிந்துள்ளனர். இந்த வருடம் ஆடிமாதத்தில் இரண்டு அமாவாசை வந்தாலும் இறுதி அம்மாவாசை இன்று உகந்ததாக கருதப்படுகிறது. அதிகளவிலான மக்கள் குவிந்துள்ளதால் காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
The post ஆடி அமாவாசை: நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு..!! appeared first on Dinakaran.