பள்ளிபாளையம், ஆக. 15: தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு, புதிய வீடுகள் கட்ட உத்தரவிட்ட அமைச்சர் மதிவேந்தன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினார். பள்ளிபாளையம் அடுத்த சின்னாக்கவுண்டம்பாளையம் கிராமத்தில், கடந்த 11ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 6 குடும்பத்தினரின் வீடுகள் எரிந்து சாம்பலானது. உடமைகளை இழந்த அவர்களை, கலெக்டரின் உத்தரவின்பேரில் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். வீடிழந்த சாந்தாமணி, ஈஸ்வரி, குமாரி, லட்சுமணன் ஆகியோர் எரிந்து போன வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகளை கட்டிக்கொள்ள தலா ₹1.25லட்சம், பாதி எரிந்த நிலையில் இருந்த மைனாவதி, தேன்மொழி ஆகியோரது வீடுகளை புதுப்பித்துக்கொள்ள, தலா ₹25ஆயிரம் நிதியும் ஒதுக்கி அதற்கான உத்தரவினை வழங்கினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாத உணவு தேவையை பூர்த்தி செய்ய அரிசி மளிகை, வேட்டி சேலைகளையும், பட்டா, ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், கலெக்டர் உமா, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், தாசில்தார் சண்முகவேல், வருவாய் ஆய்வாளர் கிருத்திகா, மாவட்ட திமுக அவைத்தலைவர் நடனசபாபதி, பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோவன், ஆலாம்பாளையம் பேரூர் திமுக செயலாளர் கார்த்திராஜ், பேரூராட்சி மன்ற தலைவர் சகுந்தலா ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, பள்ளிபாளையத்தை அடுத்துள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி கோபால்(60), கடந்த 8ம் தேதி காற்றுடன் பெய்த மழையில் சூளையின் புகை போக்கி விழுந்ததில் மரணமடைந்தார். அவரது மனைவி பழனியம்மாளுக்கு, தமிழக அரசு சார்பில் ₹4 லட்சம் நிதியினை அமைச்சர் மதிவேந்தன் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
The post தீ விபத்தில் வீடுகளை இழந்த 6 குடும்பத்தினருக்கு புதிய வீடுகள் appeared first on Dinakaran.