×

சுவாமியை கும்பிட்டு பணத்தை திருடிய ஆசாமி கீழ்பென்னாத்தூர் அருகே சுவாரஸ்யம் நள்ளிரவில் பாத்திரக்கடையில் புகுந்து கைவரிசை

கீழ்பென்னாத்தூர், ஆக.15: கீழ்பென்னாத்தூர் அருகே நள்ளிரவில் பாத்திரக்கடையில் புகுந்த மர்ம ஆசாமி ஒருவர், அங்குள்ள சுவாமி படத்தை பார்த்து கும்பிட்டுவிட்டு கல்லாப்பெட்டியில் இருந்த ₹8 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தில் அக்பர் என்பவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கட்டில், பீரோ, பாத்திரங்கள் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அக்பர் வழக்கம்போல் கடையில் விற்பனை முடிந்ததும் சிறிய தொகையை கல்லாப்பெட்டியில் வைத்துவிட்டு, கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து, நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்றபோது கல்லாப்பெட்டி திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்பர், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், மர்ம ஆசாமி ஒருவர் கடையில் திருடும் காட்சி பதிவாகி இருந்தது. உடனே இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் கடையின் பின்பக்கம் உள்ள தகர சீட்டை கழற்றிவிட்டு கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும், அந்த ஆசாமி அங்குள்ள சுவாமி படத்தை பார்த்து பக்தியுடன் கும்பிட்டு விட்டு பணத்ைத திருடுவதும் தெரியவந்தது. மேலும், அந்த கல்லாப்பெட்டியில் ₹8,150 ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடை உரிமையாளர் அக்பர் கொடுத்த புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கடையில் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post சுவாமியை கும்பிட்டு பணத்தை திருடிய ஆசாமி கீழ்பென்னாத்தூர் அருகே சுவாரஸ்யம் நள்ளிரவில் பாத்திரக்கடையில் புகுந்து கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Swami ,Kilpennathur ,Kilibennathur ,
× RELATED சித்திரை (ஈ) தந்த முத்திரை சீடர்கள்