×

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார் மு.க.ஸ்டாலின்: அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்குகிறார்

சென்னை: நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தேசியக்கொடி ஏற்றுகிறார். இதைத்தொடர்ந்து அப்துல் கலாம் விருது மற்றும் கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகளையும் முதல்வர் வழங்குகிறார். நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றுவார். அந்தந்த மாநில முதல்வர்கள் தலைநகரில் தேசியக்கொடியை ஏற்றுவர்.

அதன்படி, தமிழகத்தின் தலைநகர் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததும், விழா மேடையில் தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த `தகைசால் தமிழர்’ என்ற பெயரிலான விருது, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். இந்த விருதுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக செயல்பட்ட தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கவுரவிப்பார். முன்னதாக, காலை 8.45 மணிக்கு, கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார். முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைப்பார்.

இதையடுத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதல்வர் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வணக்கம் செலுத்துவார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார். கோட்டை கொத்தளத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்றுவதை முன்னிட்டு இரவு, பகல் என 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் விஐபிக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அமர்வதற்கான மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

* ரூ.45 லட்சத்தில் கொடிக்கம்பம் புதுப்பிப்பு
சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி கம்பம் தமிழக பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கும் பணி ரூ.45 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 3வது முறையாக தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார் மு.க.ஸ்டாலின்: அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : 77th Independence Day ,M.K.Stalin ,Abdul Kalam ,Kalpana Chawla ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...