சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சுதந்திர நன்னாளில் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் அனைவரையும் போற்றுவோம். வீடு தோறும் தேசியக் கொடியை ஏற்றி நமது சுதந்திர உணர்வை, தேசப்பற்றை வெளிப்படுத்துவோம் என புதுவை கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். நாடு வளம் பெற நாம் அனைவரும் சாதி, மத, மொழி வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் சர்வதேச அளவில் இந்தியா முதன்மை நாடாகவும், இந்திய அளவில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும் விளங்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தோடு இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணித்தால் தான் அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும்.
இத்தகைய சூழல் ஏற்படுவதற்கு விரைவில் தேசிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க கடுமையாக உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் நாம் உறுதியேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), முத்தரசன் (இந்திய கம்யூ.), ஜி.கே.வாசன்(தமாகா) உள்பட பல்வேறு தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
The post அரசியல் கட்சி தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து appeared first on Dinakaran.