×

உத்திரமேரூரில் சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: சென்டர் மீடியனை அகற்ற கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் – மானாம்பதி இரு வழிச்சாலையில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் அருகே சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு மட்டும் சாலைக்கு நடுவே சாலை தடுப்பு சுவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் குறுக்கே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதால், சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால், தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த தடுப்பு சுவர் அமைத்து சுமார் 5 மாத காலங்கள் மட்டுமே ஆனநிலையில் இதுவரை 15க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், சில உயிரிழப்புகளும், பலர் படுகாயமும் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில், கனரக லாரி வந்தவாசியில் இருந்து உத்திரமேரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, அங்காளம்மன் கோயில் அருகே சென்ற கனரக லாரி, சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரி டிரைவர் உதயம் சிறு காயங்களோடு உயிர் தப்பினார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகம் சம்மந்தபட்ட துறையினருக்கு உத்தரவிட்டு, சாலையின் குறுக்கே உள்ள விபத்தை ஏற்படுத்தும் தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உத்திரமேரூரில் சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: சென்டர் மீடியனை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uttramerur ,Uthramerur ,Angalamman temple ,Manampathi ,Dinakaran ,
× RELATED சாலவாக்கத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை