×

மதுரை அதிமுக மாநாட்டிற்கான தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: மதுரையில் அதிமுக மாநாட்டிற்கான தொடர் ஜோதி ஓட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மதுரை வளையங்குளம் பகுதியில் ஆகஸ்ட் 20 தேதி அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், இதற்கு கூடுதல் கவனம் எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக மாநாட்டில் பங்கேற்கும் அனைவரையும் அசத்தும் வகையிலான ஏற்பாடுகள் வேக வேகமாக செய்யப்பட்டு வருகின்றன.

மாநாட்டிற்கு வருகைத் தரவுள்ள தொண்டர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதிமுக, தங்களிடம் தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அதன் பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் தரப்பினரால் மதுரையில் ஆகஸ்ட் 20 ம் தேதி அன்று அதிமுக மாநாடு கூட்டப்பட்டிருக்கிறது. மாநாட்டை காலை 8 மணிக்கு பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் கட்சிக் கொடியேற்றி துவக்கி வைக்க உள்ளார். அவருக்கு தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்க உள்ளனர். காலையிலிருந்து மாலை வரை கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

மாலையில் ஈ.பி.எஸ் எழுச்சி உரையாற்றுகிறார். மாநாடு வளாகத்தில் தொண்டர்கள் அமர்வதற்காக சுமார் 1.25 லட்சம் நாற்காலிகள் போடப்படுகின்றன. தொண்டர்களுக்கு காலை 7 மணிமுதல் இரவு 7 மணி வரையிலும் இடைவிடாது உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு மாநாட்டு தொடர் ஓட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதிமுக இளைஞர் பாசறையை சேர்ந்த 50 பேர் தொடர் ஓட்டமாக ஜோதியை மதுரை நோக்கி கொண்டு செல்கின்றனர். முன்னதாக மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கான விளம்பர பிரசார வாகனத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, மாநாட்டு தொடக்க பாடலை வெளியிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

The post மதுரை அதிமுக மாநாட்டிற்கான தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Edabadi Palanisamy ,President of the General Assembly ,Edappadi Palanisamy ,Chennai ,Edapadi Palanisamy ,Madurai Roovingulam ,Inaugural ,Secretary of State ,Jodi Fallanisamy ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது