ஆண்டிபட்டி, ஆக. 14: ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வைகை அணை பூங்காவில் குவிந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் ஏறி மகிழ்ச்சியுடன் பொழுதை களித்தனர்.
மேலும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் உல்லாச ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர். பூங்காவில் புல்வெளிகளில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடினர். வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதால், காலை முதல் மாலை வரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர்.
அதிகமான மக்கள் கூட்டம் இருந்ததால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்ததாக கூறிய சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். வைகை அணை வலதுகரை பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இசை நடன நீருற்று பழுதடைந்த நிலையில் உள்ளதால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இசை நடன நீருற்றை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் வைகை அணை பூங்காவை தொடர்ந்து பராமரிப்பு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.