
சென்னை: இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்க முயல்வது சட்ட விரோத செயல் என்று பாஜவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளில், 3 புதிய மசோதாக்களை பெயர் மாற்றங்களோடு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார். இந்தி போசாத மக்கள் மீது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்கு எதிராக இத்தகைய பெயர் மாற்றம் அப்பட்டமான இந்தி மொழி திணிப்பாகும். இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்க முயல்வது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
இதை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசியல் பேராண்மையோடு தமது கடுமையான எதிர்ப்பினை விரிவாக பதிவு செய்திருக்கிறார். இந்தி, சமஸ்கிருதம் படிக்க விரும்புபவர்கள் இந்தி பிரசார சபாவிலோ, அல்லது வேறு எங்காவது படித்துக் கொள்ளலாமே தவிர, அற்குரிய வாய்ப்பை உருவாக்குவது தமிழ்நாடு அரசின் பொறுப்பல்ல. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கொள்கையை மொழி திணிப்பு என்று நிர்மலா சீதாராமன் கூறுவது எந்த வகையிலும் நியாயமற்றதாகும். தமிழ்நாட்டின் கள நிலவரத்தை புரிந்து கொள்ளாமல், தமிழக மக்கள் மீது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்வாரேயானால் அதன் விளைவுகளை பாஜ கடுமையாக சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
The post இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிப்பது சட்ட விரோதம்: பாஜவுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை appeared first on Dinakaran.