×

காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் சட்டபூர்வ நடவடிக்கை தேவை: தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற, போர்க்கால வேகத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையின் நீர் இருப்பு இன்று காலை நிலவரப்படி 21.47 டி.எம்.சியாக குறைந்து விட்ட நிலையில், இருக்கும் நீரைக் கொண்டு கூடுதலாக தண்ணீர் திறக்கவும் வாய்ப்பில்லை. அணைக்கு வினாடிக்கு 5100 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அதைக் கொண்டு தான் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கர்நாடகத்திடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரைப் பெறாமல் கூடுதல் நீரை திறக்க வாய்ப்பில்லை. குறுவைப் பயிர்களைக் காப்பாற்றவும் வழியில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணையைத் தொடர்ந்து கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 10,268 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால், காவிரி படுகையில் நிலவும் சூழலை சமாளிக்க இந்த நீர் போதுமானதல்ல. ஆகஸ்ட் மாதத்திற்கு வழங்க வேண்டிய 45.95 டி.எம்.சி தண்ணீரில், இம்மாதத்தில் மீதமுள்ள 20 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 டி.எம்.சி வீதம் 30 டி.எம்.சி வழங்க வேண்டும்.

ஆனால், அதில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கே தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இது நியாயமல்ல. கர்நாடகத்திடமிருந்து நமக்குரிய தண்ணீரைப் பெற சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கருகச் செய்து விடும். எனவே, விடுமுறை நாளாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரியில் கூடுதல் நீரைப் பெறுவதற்கு போர்க்கால வேகத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் சட்டபூர்வ நடவடிக்கை தேவை: தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Caviri ,Ananpurani ,Government ,Tamil Nadu ,Chennai ,Kaviri ,Anbaramani ,Tamil Nadu Government ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...