×

நாகப்பட்டினத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு

 

நாகப்பட்டினம்,ஆக.12: போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகப்பட்டினம் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி வரவேற்றார். கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார். போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை எஸ்பி ஹர்ஷ்சிங் வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதி மொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும்போது, போதை பழக்கத்துக்கு எதிராக பள்ளிகளில் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இருந்தும் போதை பொருட்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தகுந்த விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். போதை பழக்கத்தால் சமுதாயத்தில் மரியாதை குறையும். முதலில் பள்ளி மாணவ மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டும். நல்ல மனிதர்களை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு அவர்களை பின்பற்ற வேண்டும். போதை அழிவுக்கான பாதையாக உள்ளது. இதை உணர்ந்து ஒவ்வொரு மாணவர்களும் தங்களை சுற்றி உள்ளவர்களிடம் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், எஸ்பி ஹர்ஷ்சிங் ஆகியோர் மாணவ- மாணவிகளுக்கு கொடுத்தனர். பள்ளி தாளாளர் ஜான்விக்டர், தலைமை ஆசிரியர் ஜோசப், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வைத்திலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். டிஎஸ்பி பிலிப்கென்னடி நன்றி கூறினார்.

The post நாகப்பட்டினத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Pure Anthony Higher School ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...