×

மானிய விலையில் பைக் வாங்க வக்பு வாரியத்தில் பணியாற்றும் உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு

காஞ்சிபுரம், ஆக.12: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வக்பு வாரிய நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள், மானிய விலையில் பைக் வாங்குவதற்கு வக்பு வாரிய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 62 வக்பு வாரிய நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்திட மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ₹25,000 இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியவராகவும், தமிழகத்தை சேர்ந்தவராகவும், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், எல்எல்ஆர் சான்று பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

62 நிறுவனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கும் பட்சத்தில் பேஷ் இமாம், அரபி ஆசிரியர்கள், மோதினார், முஜாவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானிய தொகை வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், சாதிச்சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம், எல்எல்ஆர், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்றில், மாவட்ட வக்பு கண்காணிப்பாளரின் மேலொப்பம் பெற்று தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மானிய விலையில் பைக் வாங்க வக்பு வாரியத்தில் பணியாற்றும் உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ulama ,Waqf Board ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram ,Ulamas ,Wakpu Board ,Kanchipuram district ,Wakpu Boards ,Dinakaran ,
× RELATED ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா...