×

யாருடைய மேலாண்மை பற்றி யார் கருத்து சொல்வது? பாஜ ஆட்சியில் ஒன்றிய அரசின் கடன் 60 சதவீதமாக அதிகரிப்பு: நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி

மதுரை: ‘யாருடைய மேலாண்மை பற்றி யார் கருத்து சொல்வது?. பாஜ ஆட்சிக்கு வந்த பின்பு ஒன்றிய அரசின் கடன் 60 சதவீதமாக உள்ளது’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும் மதுரை மத்திய தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கான பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. இவ்விழாக்களில் பங்கேற்ற தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் நிருபர்கள், ‘‘கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாரே’’ எனக்கேட்டனர்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: உற்பத்தி திறனை வைத்துத்தான் கடனை மதிப்பிட வேண்டும். கடன் வாங்குவதில் இரண்டாவது இடத்தில்தான் நாம் இருந்தோம். 2014 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி இல்லாமல் இருந்திருந்தால், நாமும் கடன் வாங்குவதில் இரண்டாவது இடத்தில் தான் இருந்திருப்போம். கடன் அளவு மாநிலத்தின் உற்பத்திக்கு ஏற்ப தான் இருக்கும். நிர்மலா சீதாராமன் சொன்ன நம்பரில் தவறில்லை. மகாராஷ்டிரா மட்டும் தான் தமிழகத்தை விட உற்பத்தி அதிகம் உள்ள மாநிலம். அவர்களுக்கு கடன் குறைவாக இருக்கிறது என்றால் அவர்கள் நிதியை சிறப்பாக கையாள்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறைக்கு சென்ற பிறகு, ஆட்சியாளர்கள் நிதி ஆதாரத்தை முறையாக கையாளவில்லை. இதனாலேயே 2014 முதல் 2021 வரை பொருளாதார நிதிநிலை கீழிறங்கி விட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின் நிதி நிலையை அதிகரித்துள்ளோம். உற்பத்தி திறனை அதிகரிக்க, அதிகரிக்க நிதித்தேவையும் அதிகரிக்கும். ஆனால், அதிமுக ஆட்சியில் உற்பத்தி இல்லாமலேயே, 60 சதவீத கடனை வாங்கி விட்டனர். கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாடு உற்பத்தியில் (ஜிடிபி) கணக்கிட வேண்டும். தமிழ்நாடு அரசின் கடன் ஜிடிபியில் 27% தான். ஆனால், ஒன்றிய அரசு கடன் ஜிடிபியில் 60 சதவீதமாக இருக்கிறது. இது பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமானது. யாருடைய மேலாண்மை பற்றி யார் கருத்து சொல்வது? தகவல் அடிப்படையில் நிர்மலா சீதாராமன் சொன்னது உண்மை. அரசியல் ரீதியாகவோ, உற்பத்தி அடிப்படையிலோ ஒப்பிட்டு பார்த்தால் நான் சொல்வது புரியும். இவ்வாறு தெரிவித்தார்.

The post யாருடைய மேலாண்மை பற்றி யார் கருத்து சொல்வது? பாஜ ஆட்சியில் ஒன்றிய அரசின் கடன் 60 சதவீதமாக அதிகரிப்பு: நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Union government ,BJP ,Minister ,PDR ,Nirmala Sitharaman ,Madurai ,Minister PDR ,Nirmala ,Sitharaman ,Dinakaran ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...