×

பூவிருந்தவல்லியில் மின்வாரிய கேபிள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு

சென்னை: பூவிருந்தவல்லியில் மின்வாரிய கேபிள்புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த இருவரில் குணா (22) என்பவர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். முறையான எச்சரிக்கைப் பலகைகள், மின் விளக்குகள் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்க பணி, மழைநீர் வடிகால்வாய் மற்றும் மின்சார வாரியம் சார்பில் உயரழுத்த புதைவட கேபிள் இணைக்க ராட்சத கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நடைபெறும் பகுதிகளில் போதிய விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படாததால் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் பல சமயங்களில் ஏற்படுகின்றன. மேலும் இப்பணிகளினால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இதில் நேற்று பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த குணா (22), தன் நண்பர் மதிவாணன் என்பவருடன் பைக்கில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குணா பூந்தமல்லியில் உள்ள மின் பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அலுவலகத்துக்கு அருகேயே அறையெடுத்து தங்கியுள்ளார். அவர் நேற்றிரவு நைட் ஷிப்ட் வேலைக்கு சென்ற இவர், இருசக்கர வாகனத்தில் நண்பன் மதிவாணனுடன் சென்னீர்குப்பத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் உயர் அழுத்த கேபிள் இணைப்பு தருவதற்காக ராட்சத தடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது.

சுமார் பத்து அடி ஆழம் 20 அடி அகலம் கொண்ட இந்த பள்ளத்தில் கால்வாய் போல அமைக்க கம்பிகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அங்கு சாலை மூடப்பட்டுள்ளது என எந்த எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் கரும் இருட்டில் இருந்துள்ளது அந்த சாலை. இதனால் வாகனம் ஓட்ட சிரமப்பட்டதாக சொல்லப்படும் குணாவும் அவர் நண்பரும், நேரடியாக ராட்சத பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கினர். இவ்விபத்தில் கம்பிகள் குத்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்ட குணா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். பலத்த காயங்களுடன் மதிவாணன் மீட்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்து போன குணாவின் உடலை கைப்பற்றிய ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெற்ற இடத்தில் அதற்கான எச்சரிக்கை பதாகைகள், மின்விளக்குகள் வைக்கப்படாததே விபத்துக்கான காரணமென சொல்லப்பட்டது. இருப்பினும் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணமென காவல்துறை தரப்பு மின்வாரியத்திடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் ‘எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன’ என்று மின் வாரியமும் தெரிவித்துள்ளது.

The post பூவிருந்தவல்லியில் மின்வாரிய கேபிள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Poovindavalli ,CHENNAI ,Guna ,Dinakaran ,
× RELATED பூவிருந்தவல்லி அருகே தனியார்...