×

பெரும்புதூர் அருகே பரபரப்பு தெர்மாகோல் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

பெரும்புதூர், ஆக.11: பெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் தெர்மாகோல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தெர்மாகோல் மூலம் டிரே, மீன் பெட்டி, காய்கறி பெட்டிகள், குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களுக்கு தெர்மாகோல் தயாரிக்கப்பட்டு அந்தந்த தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென கரும்பு புகை வெளியேறி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைகண்ட ஊழியர்கள், உடனடியாக தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்து, இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள், தொழிற்சலையில் எரிந்துக்கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். ஆனால், தொழிற்சாலை முழுவதும் ரசாயனம் கலந்த தெர்மாகோல் எரிந்து வருவதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்ததால், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தனர்.

பின்னர் திருவள்ளூர், பேரம்பாக்கம், தனியார் தொழிற்சாலையில் இருந்து கூடுதலாக மூன்று தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் மூன்று மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிந்ததால் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு கிடங்கில் சேமித்து வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான தெர்மாகோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட கோணத்தில் பெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பெரும்புதூர் அருகே பரபரப்பு தெர்மாகோல் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Perumbudur ,Shengadu ,Thermocol ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...