×

தர்மபுரி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு

தர்மபுரி, ஆக.11: தர்மபுரி, சிவாடி, தொப்பூர் ரயில் நிலையங்களில், பெங்களூரு ரயில்வே கோட்ட மேலாளர் திடீரென ஆய்வு செய்தார். தர்மபுரி ரயில்நிலையத்திற்கு பெங்களூரு ரயில்வே கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன், நேற்று காலை வந்தார். ரயில் நிலையத்தின் நுழைவாயில் முன்புள்ள ரவுண்டானா, பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் டிக்கெட் கவுன்டர், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம், பிளாட்பாரங்களை பார்வையிட்டார்.

பின்னர், ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், சிவாடி ரயில்நிலையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து எச்பிசிஎல் பெட்ரோல், டீசல் சேமிப்பு கிடங்கிற்கு சென்றார். அங்கு பெட்ரோல், டீசல் ரயிலில் கொண்டு வந்து இறக்குவது குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். இதையடுத்து, தொப்பூர் ரயில்நிலையம், காருவள்ளி ரயில் நிலையம் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பெங்களூருவுக்கு தனி ரயிலில் புறப்பட்டு சென்றார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘பெங்களூரு ரயில்வே கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன், தர்மபுரி, சிவாடி, தொப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் நவீன வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்,’ என்றனர்.

The post தர்மபுரி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri Railway Station ,Dharmapuri ,Bengaluru Railway ,Sivadi ,Toppur ,Dharmapuri… ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி