சென்னை: திரைப்பட நடிகரும், பாஜ பிரமுகருமான எஸ்.வி.சேகர், காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்தார். பின்னர், எஸ்வி சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தமிழ்நாடு பாஜ தலைமை சரியான நிலைமையில் இல்லை என்றால் எல்லாம் கீழே ஆடத்தான் செய்யும். அதை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு நாளைக்கு 3 கிலோமீட்டர் நடக்கிறார். அதுவே, அவருக்கு முடியவில்லை. சிங்கம் என்று அவரே சொல்கிறார். ஆனால், நடப்பதை எல்லாம் பார்த்தால் ஏதோ கிழ சிங்கம் ஆன மாதிரி தெரிகிறது நமக்கு.
அதனால், இந்த நடை பயணத்தினால் ஒன்றும் நடக்காது. அண்ணாமலை என்பது அரசியல் பூஜ்ஜியம். தமிழ்நாட்டில் பொருத்தவரைக்கும் பாஜவில் குறைந்தது 10 வருடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தால்தான் பாஜ உடைய ஐடியாலஜி தெரியவரும். எதுவுமே தெரியாமல் யாரோ ஒருவரை சந்தோஷப்படுத்தி, அந்த நபர் இவரை சந்தோஷப்படுத்தி, திடுக்கென்று இந்த பதவியை கொடுத்திருக்கிறார்கள். இதனால், பாஜவுக்கு தான் நஷ்டம் ஏற்படுமே தவிர, அண்ணாமலைக்கு பெரிய லாபம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
டெல்லியில் ஆட்சிக்கு பிஜேபி வரும், தமிழ்நாட்டினுடைய உதவி இருக்காது. அண்ணாமலை இருக்கின்ற வரையில், தமிழ்நாட்டில் பாஜ ஒரு சீட்டு கூட பெறாது. வாய்ப்பே கிடையாது. ஏனென்றால், அண்ணாமலையை பொருத்தவரைக்கும் அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது மாதிரியே அவர் பேசி வருகிறார். அதிமுக கூட்டணி தான் பாஜவிற்கு தமிழ்நாட்டில் பலம் அந்த பலத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை இருக்கிற வரைக்கும் அதிமுகவினுடைய ஒரு ஓட்டு கூட பாஜ பக்கம் விழாது. பாஜவில் இருப்பவர்கள் மோடிக்காகவும், அமித்ஷாக்காகவும் அவர்கள் அந்த கூட்டணி தர்மத்தை மதித்தாலும், என்றைக்கு அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசினாரோ அதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் அடிமட்ட தொண்டர்கள் கூட அண்ணாமலையை மன்னிக்க தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post நடை பயணத்தால் பாஜவிற்கு நஷ்டம் அண்ணாமலை இருக்கும் வரை பாஜவிற்கு ஒரு சீட்டு கூட வராது: நடிகர் எஸ்.வி.சேகர் அதிரடி appeared first on Dinakaran.