×

எனக்கு அந்த பொண்ணுதான் வேணும்… டவரில் ஏறி ‘போக்சோ’ வாலிபர் அடம்

திருச்சி: சிறுமியை திருமணம் செய்து வைக்க கோரி திருச்சியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் நாகமங்கலம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் தினேஷ் (22). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் மணிகண்டம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து தினேஷ் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் போக்சோ வழக்கில் ஒரு வருடம் சிறை தண்டனை முடிந்து தினேஷ் விடுதலையானார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதே பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்தார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு தற்போது 17 வயதே ஆவதால் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தினேஷ் நாகமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே பயன்பாட்டில் இல்லாத தனியார் செல்போன் டவரில் ஏறி
தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவல் அறிந்த கன்டோன்மென்ட் தீயணைப்புத் துறையினர் வந்து தினேஷை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தினேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தால்தான் இறங்குவேன், இல்லாவிட்டால் குதித்து விடுவேன் என்று கூறி அடம் பிடித்தார். 3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப்பின் போலீசார் அந்த பெண்ணையே திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
இதையடுத்து அந்த வாலிபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து தற்கொலை முயற்சி வழக்கு பதிந்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post எனக்கு அந்த பொண்ணுதான் வேணும்… டவரில் ஏறி ‘போக்சோ’ வாலிபர் அடம் appeared first on Dinakaran.

Tags : Adam ,Trichy ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்