×

சென்னையில் சிறுமியை மாடு முட்டிய விவகாரம்… உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி, இளங்கோ நகர் தெருவில் சாலையில் தனது தாயுடன் நடந்து சென்ற ஒரு பள்ளிச்சிறுமியை, பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. மாடுகளின் கால்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சிறுமியை, இரண்டு மாடுகள் கடுமையாக தாக்கியது. தொடர்ந்து அருகில் இருந்த ஒருவர் தடியால் மாட்டை விரட்டி சிறுமியை காப்பாற்றினார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பசுமாடு பள்ளி குழந்தையை வெறியோடு தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரையும் திகிலுரச் செய்தது. பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விசாரணை நடத்திய அரும்பாக்கம் போலீசார் சாலையில் அஜாக்கிரதையாக மாடுகளை அழைத்து சென்ற உரிமையாளரான அரும்பாக்கத்தை சேர்ந்த விவேக் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன்; அரும்பாக்கத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடுத்து 2 மாடுகளும் பிடிக்கப்பட்டு பெரம்பூர் மற்றும் புதுப்பேட்டை பகுதிகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை பகுதியில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. மாதத்தில் 500 மாடுகள் பிடிக்கப்பட்டு 51 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், அதன் உரிமையாளர்கள் அந்த அபராத தொகையை செலுத்திவிட்டு, சம்பவத்தை கருத்தில் கொள்ளாமல் மீண்டும் அவற்றை தெருக்களில் சுற்றவிடுகின்றனர்.

நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க சில விதிமுறைகள் உள்ளன. 36 அடி தனி இடத்தில்தான் மாடுகளை வளர்க்க வேண்டும். சென்னையின் முக்கிய இடங்களில் இவ்வாறு மாடுகள் சுற்றித்திரிவதால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. நேற்று குழந்தையை மாடு தாக்கிய விவகாரத்தில் அந்த மாட்டை பிடித்து கண்காணிப்பில் வைத்துள்ளோம். மேற்கொண்டு இந்த நடவடிக்கை கடுமைப்படுத்தப்படும். தேவைப்பட்டால் இது குறித்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். எனவே மக்கள் நலன் கருதி மாட்டின் உரிமையாளர்கள் இனி இதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையும் அரசு சார்பில் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

The post சென்னையில் சிறுமியை மாடு முட்டிய விவகாரம்… உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Commissioner ,Radhakrishnan ,Ilango Nagar Street, Arumbakkam MDA Colony, Chennai ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...