![]()
சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்காக ரூ.12.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு பல்வேறு முனைப்பான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அம்மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 3 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;
கடலூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல தொழிற்பயிற்சி மாணவியர் விடுதிக் கட்டடம்;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், 2 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்;
தஞ்சாவூரில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், 2 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்;
மதுரை மாவட்டம், மேலூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;
என மொத்தம் 12 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் திருமதி. ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் திரு. அணில் மேஷ்ராம், இ.ஆ.ப., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் திரு. வா. சம்பத், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலாளர் திரு. ஹனீஷ் சாப்ரா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ.12.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

