×

வாகன சோதனையில் போலீசுக்கு பயந்து கல்லணையில் தண்ணீரில் குதித்து தப்பிய பைக் திருடர்கள் 2 பேர் கைது ரூ.8லட்சம் கொள்ளை வழக்கில் தொடர்பா?

திருவெறும்பூர், ஆக.10: கல்லணை அருகே போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக இருசக்கர வாகன திருடர்கள் இருவர் கல்லணையில் காவிரி ஆற்று தண்ணீரில் குதித்து தப்பிக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தோகூர் போலீசார் கடந்த 5ம் தேதி கல்லணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் போலீசை கண்டதும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்ற நிலையில் இருவரும் கொள்ளிட ஆற்றில் குதித்து தப்பினர். இந்நிலையில் அவர்கள் விட்டுசென்ற இரு சக்கர வாகனத்தை போலீசார் தோகூர் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் அன்றிரவு 10 மணிக்குமேல் இரண்டு வாலிபர்களும் வந்து காவல்நிலையம் முன் நிறுத்திய தங்களின் இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது போலீசார் அவர்களை விரட்டியுள்ளனர்.

இதனால் போலீசாரிடம் இருந்து மீண்டும் தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓடி வந்தவர்கள் கல்லணை கரிகாலசோழன் யானை சிலை அருகே உள்ள காவிரி அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் குதித்தனர். அவர்களை விரட்டி வந்த போலீசார் வாலிபர்கள் இருவரையும் காணாததால் மீண்டும் காவல் நிலையம் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் குதித்த 2 வாலிபர்களும் சுமார் 20 நிமிடம் வரை தண்ணீரில் நீச்சல் அடித்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் நீச்சல் அடிக்க முடியாத சூழ்நிலையில் தங்களை காப்பாற்றுமாறு கூக்குரல் இட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சத்தம் ஆற்றில் சத்தம் கேட்பதை பார்த்து லைட் அடித்து பார்த்துள்ளனர்.

அப்போது இருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை கண்டதும் ஆற்றில் குதித்து அவர்களை மீட்டு தோகூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் ஆரோக்கிய செல்வகுமார் (20), தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார் என்பதும், மற்றொருவர் இவரது நண்பர் திருச்சி காஜாபேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்த அப்துல்லா மகன் முகமது செலார்ஷா (19) என்பதும் தெரிய வந்தது.

இருவரும் கும்பகோணம் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தை திருடிக்கொண்டு வந்தபோது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்து போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி சென்றனர். பின்னர் மீண்டும் வாகனத்தை எடுக்க வந்தபோது போலீசார் விரட்டியதால் தப்பிக்க வழி தெரியாமல் காவிரி ஆற்றில் குதித்ததாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாலை உத்தமர்சீலி மேலவெட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் மணல்குவாரி கேசியர் மணிகண்டன், அரவிந்த் ஆகியோரின் கண்ணில் மிளகாய்பொடி தூவி ரூ.8லட்சத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் செல்வகுமார், முகமது செலார்ஷா விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

The post வாகன சோதனையில் போலீசுக்கு பயந்து கல்லணையில் தண்ணீரில் குதித்து தப்பிய பைக் திருடர்கள் 2 பேர் கைது ரூ.8லட்சம் கொள்ளை வழக்கில் தொடர்பா? appeared first on Dinakaran.

Tags : Kallanai ,Thiruverumpur ,Cauvery ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...