×

மக்களிடம் ரூ.4,620 கோடி முதலீடு பெற்று மோசடி ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொதுமக்களிடம் ரூ.4,620 கோடி மோசடி செய்த வழக்கில் ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.4,620 கோடி முதலீடுகள் பெற்றது. அதன் பிறகு வாக்குறுதி அளித்தபடி பணத்தை திருப்பி தரவில்லை. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவினர் பதிவு செய்து, அந்நிறுவனத்தை சேர்ந்த 14 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹிஜாவு நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகி சவுந்தரராஜன் என்பவர் ஜாமீன் கோரி சென்னை நிதி நிறுவனம் மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கருணாநிதி முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளனர். 16,500 நபர்கள் இதுவரை புகார் அளித்துள்ளனர். 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளிநாடு தப்பிசெல்லவும் சாட்சி மற்றும் ஆவணங்களை கலைக்க வாய்ப்புள்ளது. மேலும் மீட்க வேண்டிய தொகை அதிகம். எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி, ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகி சவுந்தரராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post மக்களிடம் ரூ.4,620 கோடி முதலீடு பெற்று மோசடி ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Hijavu financial company ,Chennai Special Court ,Chennai ,Hijavu Finance Company ,Soundararajan ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு