×

பள்ளியில் புகார் பெட்டியை திறந்தபோது அதிர்ச்சி; பள்ளி ஆசிரியர் மீது 16 மாணவிகள் பலாத்கார புகார்: ஆசிரியர் தலைமறைவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே நடுநிலை பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் 16 மாணவிகளை பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியை திறந்து பார்த்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே கருளாயி என்ற பகுதியில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்காக சமீபத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டது. வாரத்திற்கு ஒரு முறை ஆசிரியர்கள் இந்த பெட்டியைத் திறந்து மாணவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பார்கள். இந்தநிலையில் நேற்று வழக்கம்போல இந்த புகார் பெட்டியை திறந்து பரிசோதித்த ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பள்ளியில் பணிபுரியும் வல்லப்புழா பகுதியைச் சேர்ந்த முகம்மது நவ்ஷார் என்ற ஆசிரியர் மீது 16 மாணவிகள் பலாத்கார புகார் எழுதி பெட்டியில் போட்டிருந்தனர்.

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மலப்புரம் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று புகார் எழுதிய ஒரு மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் கடந்த மாதம் 20ம் தேதி ஆசிரியர் முகம்மது நவ்ஷார் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த மாணவி போலீசிடம் கூறினார். அதைத்தொடர்ந்து ஆசிரியர் நவ்ஷார் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக புகார் எழுதிய மற்ற மாணவிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்கிடையே ஆசிரியர் நவ்ஷார் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பள்ளியில் புகார் பெட்டியை திறந்தபோது அதிர்ச்சி; பள்ளி ஆசிரியர் மீது 16 மாணவிகள் பலாத்கார புகார்: ஆசிரியர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Malappuram, Kerala ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!