×

மதுபோதையால் நடந்த விபத்து பைக் மீது கார் மோதி தம்பதி உட்பட 3 பேர் பலி

*5 பேர் படுகாயம்

திருமலை : விசாகப்பட்டிணம் அருகே மதுபோதையில் இருந்தவர்கள் ஓட்டி வந்த கார், பைக் மீது மோதிய விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் இருந்து என்தாடா பகுதி நோக்கி நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த காரில் 6 பேர் இருந்தனர். அதில் இருந்தவர்கள் மதுபோதையில் காரை இயக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், சாலையில் தாறுமாறாக சென்று கொண்டிருந்த கார், அங்குள்ள தனியார் நட்சத்திர ஓட்டலை கடந்தபோது, திடீரென நிலைதடுமாறி சென்டர் மீடியன் மீது மோதி எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது, அந்த வழியாக வந்த பைக் மீது இவர்களது கார் மோதி அருகில் உள்ள முட்புதருக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் பைக்கில் வந்த தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். காரில் இருந்த ஒருவரும் இறந்தார். மற்ற 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே விசாகப்பட்டிணம் போலீசாருக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து சடலங்களை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் பைக்கில் வந்த தம்பதி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதிவிராஜ்(28), பிரியங்கா(21) என்பதும், இவர்கள் பிழைப்புக்காக விசாகப்பட்டிணத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறியதும் தெரியவந்தது.மேலும், காரில் வந்து இறந்தவர் விசாகப்பட்டிணம் பி.எம்.பாலம் பகுதியை சேர்ந்த மணிகுமார்(24) என தெரியவந்தது. படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக விசாகப்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவனிடம் செல்போன் பறித்தவர் சாவு

விபத்துக்குள்ளான காரில் வந்த அனைவரும் விசாகப்பட்டிணம் கடற்கரையில் மது குடித்து கும்மாளம் அடித்துள்ளனர். அப்போது, அங்கு நண்பர்களுடன் சென்ற கல்லூரி மாணவன் ஒருவனிடம் அவர்கள் தகராறு செய்துள்ளனர்.

மேலும், அந்த மாணவனை மணிகுமார் உள்ளிட்டோர் தாக்கிவிட்டு செல்போனை பறித்துள்ளனர். அதன்பின்னர் காரில் தப்பியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன், கடற்கரை லிமிட் போலீசில் புகார் கொடுத்தார். புகார் கொடுத்த சில நிமிடங்களில் கார் விபத்துக்குள்ளாகி மணிகுமார் இறந்தது தெரியவந்துள்ளது.

The post மதுபோதையால் நடந்த விபத்து பைக் மீது கார் மோதி தம்பதி உட்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Padukayam Tirumala ,Visakhapatnam ,
× RELATED பரோலில் வந்தபோது தப்பிய கைதி விசாகப்பட்டினத்தில் சுற்றிவளைப்பு