*வணிகர்கள் சங்கங்களின் பேரவை வலியுறுத்தல்
ஊட்டி : வணிகர்கள் ஜிஎஸ்டி கட்டணத்தை மாதம் தோறும் பதிவேற்றம் செய்ய ஒன்றிய அரசு கால அவகாசம் வழங்க வேண்டும் வணிகர்கள் சங்கங்களின் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு ஊட்டியில் உள்ள ஆனந்தகிரி அரங்கில் நடந்தது.
நீலகிரி மாவட்ட தலைவர் முகம்மது பாரூக் வரவேற்றார். மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாவை மண்டல தலைவர் சந்திரசேகர், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நீலகிரி மாவட்ட செயலாளர் குலசசேகரன், பொருளாளர் லியாகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு உள்ளாட்சி கடைகள் வியாபாரிகள் பல்வேறு பிரச்சனை தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, பேரமைப்பின் வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேல் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது. தமிழகமெங்கும் உள்ளாட்சி கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளாக மாவட்டம் தோறும் ஒருவரை தேர்வு செய்து மாநில கமிட்டியை ஏற்படுத்த வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ஜிஎஸ்டியில் பதிவு வணிகம் செய்து வரும் வணிகர்கள் மீது எந்த நேரத்திலும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்யவும், கைது செய்யவும் ஒன்றிய அரசு ஆலோசனை செய்து நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வருகிறது.
ஒன்றிய அரசு இத்தகைய ஆலோசனைகளை உடனே கைவிட வேண்டும். தற்போது மாதந்தோறும் ஜிஎஸ்டி கணக்கினை 20ம் தேதிக்குள் பதிவேற்றம் ெசய்ய வேண்டும். ஒரு நாள் தாமதித்தாலும் ௮தற்கு தண்ட கட்டணம் வசூலிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். பதிவேற்றம் செய்யும்நாட்களை மேலும் ஒரு வாரத்திற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.
தமிழக அரசு சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க உத்தரவிட்டது. அதில், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்திக் கொள்ள விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
அதே விதிவிலக்கு சிறு, குறு வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இப்பிரச்னையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆயிரக்கணக்கான அபராதத் தொகையிலிருந்தும், தொடர்ந்து கடைக்கு சீல் வைப்பதிலிருந்தும் நீலகிரி வணிகர்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.
ஆண்டுதோறும், எப்எஸ்எஸ்ஐ., உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு உடனே கைவிடுவதோடு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை லைசன்சை புதுப்பிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
The post வணிகர்கள் ஜிஎஸ்டி கட்டணம் பதிவேற்றம் செய்வதில் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.