ஏரல், ஆக. 9: சின்னநட்டாத்தி வாய்க்கால் பாலத்தில் சேதமடைந்துள்ள பாலத்தின் தடுப்பு சுவர் மற்றும் வாய்க்கால் கரையோர தடுப்பு சுவரை சீரமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரில் இருந்து பெருங்குளம் செல்லும் சாலையோரத்தில் சின்னநட்டாத்தியில் பெருங்குளம் வடிகால் வாய்க்கால் மீது பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபக்கத்திலும் உள்ள தடுப்பு சுவர் உடைந்த நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த பாலத்தின் மீது செல்லும் போது எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பாலத்தின் ஓரத்தில் ஒதுங்கும் போது தடுப்பு சுவர் இல்லாததால் வாய்க்காலுக்குள் விழுந்து விடுவோமா என்ற ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மேலும் பாலத்தின் அருகில் மின் விளக்குள் இல்லாததால் விபத்தும் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் அருகில் வாய்க்கால் கரையோரத்தில் உள்ள தடுப்பு சுவரும் சேதமடைந்து உள்ளதால் மழைக்காலத்தில் சாலையில் இருந்து வாய்க்காலுக்குள் இறங்கும் தண்ணீரானது கரையோரத்தில் மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சாலையின் கரையோர பாதுகாப்பை கருதி பாலம் அருகில் வாய்க்கால் கரையோரத்தில் தடுப்பு சுவர் அமைத்திட வேண்டும். மேலும் வாகனங்கள் இந்த பாலத்தின் மீது செல்லும் போது தடுப்பு சுவர் இல்லாததால் வாய்க்காலுக்குள் விழுந்து உயிர்சேதம் ஏற்படாமல் இருப்பதற்குள் பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சின்னநட்டாத்தி வாய்க்கால் பாலத்தில் சேதமான தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.