விராலிமலை,ஆக.9: அன்னவாசல் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா அனுசரிக்கப்பட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு தாய்மார்கள் குழந்தைகளை கவனித்து கொள்ளும் விதம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற உலக தாய்ப்பால் வார அனுசரிப்பு விழாவிற்கு அன்னவாசல் அரசு முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் மணியன் தலைமை வகித்தார். மகப்பேறு மருத்துவர் வித்யாலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் மருத்துவர்கள் கிதாஞ்சலி, சுமதி உள்ளிட்டோர் கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முறைகள், குழந்தை பிறப்புக்கு பின்னர் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவு முறைகள் குறித்து பேசினார்கள்.
விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 6 பேருக்கு சத்து மாவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உரை மாத்திரை, வேர்க்கடலை, முக கவசம், இரும்பு சத்துக்கான மிட்டாய் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் பேசிய மகப்பேறு மருத்துவர் வித்யாலட்சுமி பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பாலின் அவசியம். தாய்ப்பாலில் அதிக அளவு எதிர்ப்பு சக்தி இருப்பதால் தாய்ப்பாலை குழந்தைக்கு புகட்டும் போது குழந்தைக்கு அதிக அளவில் எதிர்ப்பு சக்தி உடலில் ஏற்பட்டு நோய்கள் குழந்தையை அணுகாமல் பாதுகாக்கிறது.
முன் காலத்தில் குழந்தை வளர்ச்சிக்கு புட்டி பால் தவிர்த்து தாய்ப்பால் மட்டுமே புகட்டி வந்ததால் நோய் நொடிகள் நெருங்காமல் பாதுகாத்ததை எடுத்துக்காட்டி ஒவ்வொரு தாய்மார்களும் தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதை தன் லட்சியமாகக் கொண்டு வாழ வேண்டும் என்றார். விழாவில் அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், செவிலியர் ஜூலியட் சுதா, மருந்தாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட மருத்துவ துறையினர் பங்கேற்றனர்.
The post அன்னவாசல் அரசு மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா appeared first on Dinakaran.