×

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் தென்னை நார் தொழில்களை வகைப்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தென்னை நார் உற்பத்தி ஆலைகள் அதிக அளவில் உள்ளன. முன்னதாக, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தொழிற்சாலைகளின் வகைப்பாட்டின்படி, தென்னை மட்டையில் இருந்து பொருட்கள் தயாரிப்பது “வெள்ளை” பிரிவின் கீழ் வருவதால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலைப் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் 2021 செப்டம்பரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன் தென்னை நார் அலகுகளை மறு வகைப்படுத்துவது தொடர்பாக ஒரு கூட்டத்தை கூட்டினார். தென்னை நார் தொழிலை உற்பத்தி செயல்முறைகளின் அடிப்படையில் வகைப்படுத்துமாறு பல்வேறு தென்னை நார் தொழில் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தன. இதற்கிடையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 25.08.2021 தேதியிட்ட உத்தரவின் மூலம் 0.A.எண்.216/2021-இல் தென்னை நார் தொழிலை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைக்காக வகைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட்டது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 08.10.2021 அன்று பிறப்பித்த ஆணையின் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழு தென்னை நார் தொழிற்சாலைகளுக்கான மாசுக் குறியீட்டு மதிப்பெண்ணை வகுத்து, அதன் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் 10.11.2021 தேதியிட்ட நடவடிக்கையின் மூலம் ‘ தென்னை நார் உடைத்தல்/டி-ஃபைபர் /பித் பதப்படுத்துதல் தொழில்’ ஆகியவற்றை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்தியது. தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கம் தென்னை நார் தொழிற்சாலைகளை மறுவகைப்படுத்துவதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் W.P.No.25737/2021 மூலம் வழக்கு தொடர்ந்தது, உயர்நீதி மன்றம் இவ்வழக்கில் 03.12.2021 நாளிட்ட தீர்ப்பில், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளை வெள்ளை வகையில் தொடருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது தென்னை நார் தொழிற்சாலைகள் வெள்ளை நிற வகைப்பாட்டில் தொடர்கிறது.

தற்போது, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஜூலை 2023-ல் தொழில்துறைகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் வெள்ளை வகைகளாக வகைப்படுத்துவது தொடர்பான வரைவு அறிவிப்பை வெளியிட்டது. இதில் தென்னை நார் உற்பத்தி (ஈரமான / சாயம் பூசும் செயல்முறை) ஆரஞ்சு பிரிவின் கீழும், தென்னை நார் உற்பத்தி (உலர் செயல்முறை) பச்சை பிரிவின் கீழும், தென்னை நார் பொருட்கள் உற்பத்தி வெள்ளை பிரிவின் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமையில் இன்று 08.08.2023 நாமக்கல் கவிஞர் மாளிகை 7-வது தளத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற தென்னை நார் தொழில்களை வகைப்படுத்துதல் குறித்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா ஸாஹூ, இஆப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர், முனைவர் மு, ஜெயந்தி. இவப., மற்றும் உறுப்பினர் செயலர், R. கண்ணன் மற்றும் தென்னை நார் தொழில் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் இதர அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தென்னை நார் தொழிற்சாலைகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அவைகளுக்கு தீர்வுகாண அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தற்போதைய இத்தொழிற்சாலைகள் நிலையில் வெள்ளை வகைப்பாட்டில் தான் தொடர்கிறது என தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் ஜூலை 2023-ல் வெளியிடப்பட்ட மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வரைவு வகைப்பாடு அறிவிக்கையின் மீது அனைத்து சங்கங்களும் 31.08.2023-க்குள் முறையீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

The post சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் தென்னை நார் தொழில்களை வகைப்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Classification ,Coconut Fiber Industries ,Environment ,Minister ,Maianathan ,Chennai ,Tamil Nadu ,Govai ,Erode ,Namakkal ,Karur ,Dindigul ,Kannyakumari ,Pudukkotta ,Theni ,Tirunelveli ,South Nar ,Classification of Coconut Fiber Industries ,Mayanathan ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி