டெல்லி: பாஜக ஆட்சியில் ரூ.14.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2014 முதல் ஆண்டுவாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை தொடர்பான விவரங்கள் என்ன? அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டு பின் மீட்கப்பட்ட கார்ப்பரேட் கடன்களின் விவரங்கள் என்ன? அதிகபட்ச தள்ளுபடி பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் அந்த கடனை தள்ளுபடி செய்த வங்கியின் விவரங்கள் என்ன? என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக துணைத் தலைவருமான கனிமொழி மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத்; ஒன்றிய பாஜக ஆட்சியில் 2014 தொடங்கி 2023 மார்ச் 6 வரையிலான 9 ஆண்டுகளில் ரூ.14.56 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளில் பெரிய வங்கிகளால் அனைத்துப் பிரிவு நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு ரூ.14,56,228 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2014-15-ல் ரூ.58,786 கோடியும், 2015-16-ல் ரூ.70,413 கோடியும், 2016-17-ல் ரூ.1,08,373 கோடி கடனும், 2017-18-ல் ரூ.1,61,328 கோடியும், 2018-19-ல் ரூ.2,36,265 கோடியும் 2019-20-ல் ரூ.2,34,170 கோடி கடனும், 2020-21-ல் ரூ.2,02,781 கோடியும், 2021-22-ல் ரூ.1,74,966 கோடி கடனும், 2022-23-ல் ரூ.2,09, 144 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் ரூ.14,56,226 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரு நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.7,40,968 கோடி ஆகும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post பாஜக ஆட்சியில் ரூ.14.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.