புதுக்கோட்டை, ஆக.8: புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் முறையாக பள்ளிக்கு வராததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி அந்த பள்ளிக்கூடத்தை பூட்டி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 260 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் முல்லைச்செல்வன் பள்ளிக்கு முறையாக வராமல் விடுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு வந்தாலும் முறையாக பாடம் நடத்துவதில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும் இதனால் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்து நேற்று பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை பூட்டி பள்ளிக்கு முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பாக சூழ்நிலை ஏற்பட்ட சூழலில் அங்கு வந்த வட்டார கல்வி அலுவலர் மெகராஜ் பானு மற்றும் காவல்துறையின் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட கணித ஆசிரியரை மாற்றம் செய்துவிட்டு வேறு ஆசிரியரை நியமிப்பதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்குள் சென்றனர்.
The post கணித ஆசிரியர் முறையாக வராததால் பள்ளிக்கூடத்தை பூட்டி பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.