கோவை: கோவை தனியார் கல்லூரியில் நடந்த ஆடை அலங்கார அணிவகுப்பில் குஷ்பு-வானதி சீனிவாசன் கேட்வாக் நடத்தினர். கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நேற்று நடந்தது. பாஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பங்கேற்றார். மாணவ, மாணவிகளின் ஆடை அலங்கார அணிவகுப்பின்போது குஷ்புவும், வானதி சீனிவாசனும் மேடையில் ‘கேட்வாக்’ நடந்து உற்சாகப்படுத்தினர். அப்போது குஷ்பு, வானதியின் கைகளை பற்றியடி நடந்தார்.
பின்னர் குஷ்பு அளித்த பேட்டியில், கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன்.
அவருடைய நினைவு நாளுக்காக காலையிலேயே அவருக்கு வணக்கம் சொல்லி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவு செய்தேன். கலைஞர் குறித்து பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம். நான் அங்கிருந்து வந்தவள். அவரைப் பற்றி நன்றாக தெரியும். கல்லூரி மாணவர்களுக்கு வெஸ்டர்ன் உடைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே வேளை நமது கலாசாரத்தை மறந்துவிட வேண்டாம். ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை. ஆனால், மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது. எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதுதான் எல்லை என்பதை தெரிந்து ஆடை அணிய வேண்டும். எனக்கு புடவைதான் எல்லை என்றார்.
The post ஆடை அலங்கார ஷோவில் குஷ்பு – வானதி ‘கேட்வாக்’ appeared first on Dinakaran.