×

அதிமுக பஞ். தலைவரை கண்டித்து 5 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம்

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே அதிமுக ஊராட்சி தலைவரை கண்டித்து 5 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்தை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே நாகையகோட்டை ஊராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் காளீஸ்வரி (8வது வார்டு), பாக்கியலட்சுமி (10வது வார்டு), ஜெயக்குமார் (11வது வார்டு), வினோத்குமார் (5வது வார்டு), சுப்பிரமணி (7வது வார்டு) ஆகியோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து தங்களின் ராஜினாமா கடிதத்தை கலெக்டர் பூங்கொடியிடம் அளித்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எங்கள் ஊராட்சியில் 12 கவுன்சிலர்கள். தலைவராக செந்தில் வடிவு, துணைத்தலைவராக ஈஸ்வரி உள்ளனர். இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள்.

இருவரின் கணவர்களே நிர்வாகம் செய்து வருகின்றனர். வார்டுகளுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் இவர்கள் செய்து தருவது இல்லை. ஊராட்சி நிர்வாகத்திற்கு அரசிடம் இருந்து நிதி வந்தாலும் அதனை கவுன்சிலர்களிடம் சொல்வதும் இல்லை. ஆனால் தலைவர், துணைத்தலைவர் வார்டுகளில் மட்டும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொள்கின்றனர். இதுகுறித்து தலைவரிடம் கேட்டால் சரியாக பதில் சொல்வதில்லை. மேலும் அலுவலகத்திற்கும் வருவது கிடையாது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜினாமா கடிதம் அளித்தோம்’’ என்றனர். கடிதத்தை பெற்றுக் கொண்ட கலெக்டர், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்தார்.

The post அதிமுக பஞ். தலைவரை கண்டித்து 5 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் appeared first on Dinakaran.

Tags : AIADMK Panj ,Dindigul ,Dindigul Collector ,ADMK Panchayat ,President ,Vedasandur.… ,ADMK Panj ,Dinakaran ,
× RELATED காதலியின் கணவனை கொன்ற அதிமுக பஞ்.தலைவர்