புதுச்சேரி: ‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நெறிமுறைகளை புதுச்சேரி நிரூபிக்கிறது’ என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். அவரை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ஜிப்மர் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்து கொண்டு ரூ.10 கோடி செலவில் வில்லியனூரில் கட்டப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் ரூ.17 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை துவக்கி வைத்து பேசியதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நான்கு பிராந்தியங்களும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவின் பகுதிகளுக்குள் அமைந்துள்ளதை காணமுடிகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நெறிமுறைகளை புதுச்சேரி நிரூபிக்கிறது. பிரெஞ்சுக்காரர்களின் தாக்கமும், கட்டிடக்கலை, திருவிழாக்கள் மற்றும் வாழ்க்கைமுறைகளில் பிரதிபலிக்கின்றன. பிரான்சுக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதுச்சேரி நட்புறவின் பாலமாகிறது. அளவில் சிறிதாக இருக்கும் இந்த யூனியன் பிரதேசம், மிகவும் அழகானது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக முன்னேற்ற குறியீட்டில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
தனிநபர் சுதந்திரம் மற்றும் தங்குமிடம், குடிநீர், சுகாதாரம் ஆகிய அளவுகளிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற பகுதியாக திகழ்வதும் பாராட்டுக்குரியது. இங்கு உயர்கல்வி சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த யூனியன் பிரதேசமான புதுச்சேரி, தேசிய அளவிலும், உலகளவிலும், தனி முத்திரையை பதித்துள்ளது. மக்கள் இந்த யூனியன் பிரதேசத்தை இன்னும் உயர்ந்த வளர்ச்சி மற்றும் சிறப்பான இடத்துக்கு கொண்டு செல்வார்கள். மக்கள் அனைவருக்கும் ஒளிமயமான, வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.
* கருப்புக்கொடி காட்ட திட்டம் சமூக அமைப்பு நிர்வாகிகள் கைது
மணிப்பூர் கலவரம் பற்றி நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்காமல் புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு முருங்கப்பாக்கம் பகுதியில் கருப்புக்கொடி காட்டப்படும் என்று புதுச்சேரி மாநில பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைபிரியன், சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் ஜெபின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் தீனா, ஒருங்கிணைப்பாளர் சந்திரன், செயலாளர் பரத், துணை அமைப்பாளர் கர்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
The post வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நெறிமுறைகளை புதுச்சேரி நிரூபிக்கிறது: ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு appeared first on Dinakaran.
