புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது என்பது சட்டபூர்வமானது என்பதால் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
ஒரு வழக்கில் ஒரு நபரை கைது செய்யப்பட்ட பின்னர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது.
ஏனெனில் குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு இரண்டின் கீழ் அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும் போது அந்த நபரை கஸ்டடியில் வைக்கலாம் என சட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று(நேற்று) முதல் வரும் 12ம் தேதி வரையில் அதாவது ஐந்து நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. அமலாக்கத்துறை தரப்பில் 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்படுகிறது என தீர்ப்பு வழங்கினார்கள்.
The post கைதான 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரணை உச்ச நீதிமன்றம் மறுஆய்வு: செந்தில் பாலாஜி வழக்கில் உத்தரவு appeared first on Dinakaran.