×

இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் இரு பிரிவினரும் மாறிமாறி போராட்டம்: வாலாஜாபாத் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்: அவளூர் கிராமத்தில் 2 இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசிக மற்றும் பாமக கட்சியினர் மாறி மாறி போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாலாஜாபாத் அடுத்த அவளூரில் கடந்த சனிக்கிழமை மாலை சில தினங்களுக்கு முன்பு மாலை பள்ளிக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ஆசூர் பகுதியை சேர்ந்த விஷால் (19), சுந்தர் (21) ஆகிய 2 இளைஞர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதனை அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் தட்டிக் கேட்டனர்.

இதனால், ஆவேசமடைந்த இளைஞர்கள், பெண்களை நாகரீகமற்ற முறையில், தகாத வார்த்தைகளால் பேசவே, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 2 இளைஞர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு வந்த ஆசூரை சேர்ந்த இளைஞர் விஷால் மற்றும் சுந்தரிடம் வெளியூரில் வந்து ஊர் மானத்தை கெடுக்கின்றாய் எனக் கேட்டுள்ளார். இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற 2 இளைஞர்களும் கேவலமான வார்த்தைகளால் அங்குள்ள பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், விஷால் மற்றும் சுந்தர் ஆகிய 2 இளைஞர்களையும் பிடிக்க முற்பட்டபோது சுந்தர் தப்பி ஓடி விட்டார். விஷால் அப்பகுதி மக்களிடம் மாட்டியதால் தர்ம அடி கொடுத்து தரையில் தரதரவென இழுத்துச்சென்று அடிமேல் அடி கொடுத்தனர்.

மேலும் இவர்கள் ஒட்டிவந்த பைக்கை அடித்து நொறுக்கினர். மேலும், தப்பி ஓடிய சுந்தரை ஏரிக்கரை அருகே மடக்கி பெண்களின் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்தள்ளனர்.  இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாகறல் போலீசார் விஷால், சுந்தரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது சம்மந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் விஷால், சுந்தர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விசிகவினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து அவளூர் கிராமத்தை சேர்ந்த 7 பேரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த மாகறல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து, அவளூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் ஆசூர் மற்றும் அவளூர் பகுதி மக்களிடையே சாதிய மோதல் ஏற்படாமல் அரசு தீவிர கண்காணிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் இரு பிரிவினரும் மாறிமாறி போராட்டம்: வாலாஜாபாத் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Kanchipuram ,Vishika ,BAM ,Alur ,
× RELATED கட்டவாக்கம் ஊராட்சியில் நெல் சேமிப்பு மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு