×

மது போதையில் காரை ஓட்டி வந்து முதியவர் மீது மோதியதால் பரபரப்பு: போலீசாரிடம் கடும் வாக்குவாதம்

அம்பத்தூர்: அம்பத்தூர், அத்திப்பட்டு செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் ஜான்சன் (30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அத்திப்பட்டு சாலையில் காரில் சென்றபோது அவருக்கு முன்னால் பைக்கில் சாலையை கடக்க யன்ற மாயவன் (57) என்பவர் மீது மோதிய கார், தறிகெட்டு ஓடி அங்குள்ள சுவரில் மோதியதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் ஜான்சனுக்கும் உடலில் சீராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. மேலும் மாயவனுக்கு கால் விரல்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததால் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதன்பின்னர் அந்த காரை மக்கள் சிறை பிடித்துவைத்துக்கொண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அம்பத்தூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் போலீசார் வந்து ஜான்சனை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரிந்தது. ஆனால் ஜான்சன், தான் மது குடிக்கவில்லை என்றும் குடித்துள்ளேன் என்றும் மாற்றி, மாற்றி பேசியதுடன் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரது ஓட்டுநர் உரிமத்தை கைப்பற்றியதுடன் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உட்பட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ததுடன் அவருக்கு அபராதம் விதித்து உள்ளனர்.

The post மது போதையில் காரை ஓட்டி வந்து முதியவர் மீது மோதியதால் பரபரப்பு: போலீசாரிடம் கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Johnson ,Athipat Chelliyamman ,Ambattur ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...