×

சோழவந்தான் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

சோழவந்தான்,ஆக.7: சோழவந்தான் அருகே கயிறு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினை, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சோழவந்தானை அடுத்த கருப்பட்டி ரயில் நிலையம் அருகே மதுரை முடக்குச்சாலையைச் சேர்ந்த ஜெயசீலன் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தென்னை மட்டையிலிருந்து, இயந்திரம் மூலம் நார்களை பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை இங்குள்ள நார்க்கழிவுகளில் திடீரென தீ பிடித்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கூறினர்.

தீயணைப்பு அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். கழிவுகளில் பிடித்த தீயை மேலும் பரவாமல் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடப்பதால் அவ்வழியே வாகனங்கள் செல்ல இயலாது. இருப்பினும் குறுகலான வேறு மாற்றுப்பாதையில் விரைந்து வந்து தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,இந்த தென்னை நார் தொழிற்சாலை சோழவந்தான் – நாச்சிகுளம் சாலையோரத்தில் ஆபத்தான வளைவில் அமைந்துள்ளது. எவ்வித தடுப்புகளும் வைத்து மறைக்காததால் தூசுகள், சாலை வரை பறந்து இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

The post சோழவந்தான் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Cholavantan ,Cholawandan ,Cholavanthan ,Dinakaran ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை