×

தேசிய அளவிலான அலைசறுக்கு போட்டி நிறைவு கேரள வீரர் முதலிடம் பிடித்து சாதனை: இறுதி போட்டி 12, 13ம் தேதிகளில் கோவளத்தில் நடக்கிறது

சென்னை: மாமல்லபுரத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த தேசிய அளவிலான அலைசறுக்குப் போட்டி நேற்று நிறைவு பெற்றது. இந்த போட்டியில் கேரளாவை சேர்ந்த வீரர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். மேலும், தேசிய அளவிலான இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கூட்டமைப்பின் தலைவர் விருது வழங்கினார். சென்னை அடுத்த மாமல்லபுரம் கடற்கரை குப்பத்தில் அலைசறுக்கு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற தேசிய அளவிலான அலை சறுக்குப் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை நிறைவு பெற்றது.

இதில், மாமல்லபுரம், கோவளம், சென்னை, புதுச்சேரி, மங்களூர், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 17 வயது மற்றும் 16 வயது வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிந்து பங்கேற்றனர். அப்போது, வீரர்கள் அலை சறுக்குப் பலகை மூலம் கடலில் சாகசம் நிகழ்த்தினர். இந்நிகழ்வு, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 17 வயது ஆண் பிரிவில் கேரளாவை சேர்ந்த ரமேஷ் முதல் இடமும், கோவளத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 2ம் இடமும், பெண்களுக்கான பிரிவில் கோவாவை சேர்ந்த சுகர் சாந்தி முதல் இடமும் சென்னை அடையாரை சேர்ந்த சிஸ்டி செல்வம் இரண்டாம் இடமும் பிடித்தனர். 16 வயது ஆண்கள் பிரிவில் கோவளத்தை சேர்ந்த கிஷோர் குமார் முதல் இடமும், மாமல்லபுரத்தை சேர்ந்த நவீன் இரண்டாம் இடமும், பெண்கள் பிரிவில் மாமல்லபுரத்தை சேர்ந்த கமலி முதல் இடமும், மங்களூரை சேர்ந்த கனீஷ்கா இரண்டாம் இடமும் பிடித்து அசத்தினர்.

சிறப்பு, விருந்தினர்களாக டென்னிஸ் வீரர் சோம்தேவ், இந்திய அலைச் சறுக்கு கூட்டமைப்பு தலைவர் அருண்வாசு ஆகியோர் கலந்து கொண்டு, முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு காசோலை மற்றும் பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினர். இவர்களுக்கான, இறுதிப் போட்டி வரும் 12, 13ம் தேதிகளில் கோவளத்தில் நடைபெறும். அலைச் சறுக்கு போட்டியில் முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ஜாவா பைக் பரிசாக வழங்கப்பட உள்ளதாகவும், புள்ளிப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் 14ம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டியில் கலந்து கொள்வார்கள் எனவும் அலைச்சறுக்கு கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

The post தேசிய அளவிலான அலைசறுக்கு போட்டி நிறைவு கேரள வீரர் முதலிடம் பிடித்து சாதனை: இறுதி போட்டி 12, 13ம் தேதிகளில் கோவளத்தில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kovalam ,CHENNAI ,Mamallapuram ,Dinakaran ,
× RELATED கடலில் குளித்தபோது மனைவி கண்முன்னே...