×

ரூ.32 கோடியில் மேம்பாட்டு பணிகள்; நவீனமயமாகிறது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் தொடர்பான மாதிரி வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் வகையில் அம்ரித் பாரத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் முதற்கட்டமாக 500 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகளை பிரதமர் மோடி நாளை (6ம்தேதி) தொடங்கி வைக்க உள்ளார். அம்ரித் பாரத் திட்டம் ரயில்வே வசதிகளை மேம்படுத்துவதையும் நவீனப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலும் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதற்கான தொடக்க விழா நாளை காலை 9.30க்கு, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடக்க இருக்கிறது. சுமார் ரூ.32 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. தொடக்க விழாவில் விஜய் வசந்த் எம்.பி., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்கிறார்கள். என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறித்து கோட்ட மேலாளர் சர்மா, நேற்று நிருபர்களுக்கு விளக்கமளித்தார். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் புதிய வடிவமைப்புடன் நவீனப்படுத்தப்பட உள்ளது. அலங்கார வளைவுகள், நவீன பார்க்கிங் வசதிகள், இயற்கை புல்வெளியுடன் ரவுண்டானா, நவீன வசதியுடன் பஸ் நிறுத்தங்கள், கூடுதல் எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதிகள், பயணிகள் தங்கும் அறைகள், ரயில் நிலையத்தில் ஓய்வு அறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்க உள்ளன.

இந்திய ரயில்வே வாரியத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி,மாற்று திறனாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். குறிப்பாக மாற்று திறனாளிகள் கழிவறைகள் போதுமான எண்ணிக்கையில் கட்டப்பட உள்ளன. இந்த பணிகள் தொடர்பான ஒலி, ஒளி காட்சியும் வெளியிடப்பட்டது. இதில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பது தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என கோட்ட மேலாளர் சர்மா கூறி உள்ளார்.

இந்திய ரயில்வேயில் ரயில் நிலையங்களின் நவீனமயமாக்கல் ெதாடர்ச்சியாக 2009-10 ரயில் பட்ஜெட்டில் ஆதர்ஷ் நிலைய திட்டம் தொடங்கப்பட்டது. 1,253 ரயில் நிலையங்கள் ஆதர்ஷின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கான அடையாளம் காணப்பட்டன. இதில் 1,218 ரயில் நிலையங்கள் இதுவரை மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள நிலையங்கள் 2023-24 நிதியாண்டில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதர்ஷ் நிலையத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட 1,253 நிலையங்களின் பட்டியல் 2023-24 நிதியாண்டில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 49 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்துதல நடைபெற்று வருகின்றது. ஆதர்ஷ் ரயில் நிலைய திட்டத்துக்கும், அம்ரித் பாரத் திட்டத்துக்கும் தொடர்பில்லை என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

The post ரூ.32 கோடியில் மேம்பாட்டு பணிகள்; நவீனமயமாகிறது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Junction Railway Station ,Nagarko ,PM Modi ,
× RELATED குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய...