×

நெல்லை கருப்பந்துறையில் முன்விரோதத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை பதற்றம்-போலீசார் குவிப்பு

நெல்லை, ஆக. 5: நெல்லை சந்திப்பு கருப்பந்துறையில் முன்விரோதம் காரணமாக இரவு பைக்கில் வந்த வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தத்தைச் சேர்ந்தவர் பலவேசம் மகன் மாயாண்டி (36). இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில் அருகேயுள்ள ஒரு நிறுவனத்தில் மாயாண்டி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்தவருக்கும் மாயாண்டிக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாயாண்டி வீட்டில் கடந்த வாரம் கிரைண்டர் திருட்டு போனது. இதனை மற்றொரு பிரிவை சேர்ந்தவர் திருடியதாக தனக்கு தெரிந்தவர்களிடம் மாயாண்டி கூறி வந்துள்ளார். இதனால் ஏற்கனவே இருந்த முன்விரோதம் அதிகரித்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சம்பந்தப்பட்ட மர்ம நபர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

நேற்றிரவு வழக்கம் போல் பணி முடிந்து மாயாண்டி பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கருப்பந்துறை அருகே வந்தபோது அங்கு பைக்கை வழிமறித்த மர்ம நபர்கள் 4பேர் திடீரென அரிவாளால் மாயாண்டி வெட்டுவதற்கு முயற்சித்தனர். இதனால் அவர் பைக்கை கீழே போட்டு விட்டு தப்பியோடினார். ஆனால் மர்ம நபர்கள் விடாமல் துரத்தி சென்று மாயாண்டியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டு காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு நெல்லை போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு மண்டலம்) சரவணகுமார், நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தி மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் பரணி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரத்தில் ஓடி படுத்துக்கொண்டது. இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post நெல்லை கருப்பந்துறையில் முன்விரோதத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை பதற்றம்-போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nelli Karuppanthurai ,Paddy ,Karuppanthurai ,Nellie Karuppanthurai ,Dinakaran ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...