×

முதல் திருமணத்தை மறைத்து என்னை ஏமாற்றிவிட்டார்; கீழ்ப்பாக்கம் பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2வது கணவன் பரபரப்பு புகார்

சென்னை: முதல் திருமணத்தை மறைத்து தன்னை 2வது திருமணம் செய்து ஏமாற்றிய கீழ்ப்பாக்கம் காவல் நிலைய பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2வது கணவன் பரபரப்பு புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியை சேர்ந்த சமய சஞ்சீவி முத்துப்பாண்டி (26), சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் சொந்தமாக வயரிங் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறேன். எனது அத்தை பழனியம்மாள் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சத்துணவு உதவியாளராக உள்ளார். அவர் மூலம் நுங்கம்பாக்கம் பகுதியை ேசர்ந்த ராஜலட்சுமி என்பவர் அறிமுகமானார். ராஜலட்சுமி தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

எங்களுக்கு திருமணம் செய்ய, இரு வீட்டு சம்மதத்துடன் கடந்த 15.12.2021 அன்று எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு 14.2.2022 அன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் எனக்கும், காவலர் ராஜலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. அப்போது, எங்கள் தரப்பில், கடன் வாங்கி ராஜலட்சுமிக்கு 5 சவரன் செயின், ஒரு சவரனில் தாலி மற்றும் அரை சவரன் மோதிரம் போட்டோம். பிறகு திருமண செலவு ரூ.5 லட்சம் ஆனது. திருமணம் நடந்த ஒரு வாரத்தில் ராஜலட்சுமி என்னிடம் கோபித்துக் கொண்டு சென்னை சென்றுவிட்டார். திரும்பி வரவில்லை. இதனிடையே, ராஜலட்சுமி பற்றி விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் மருதுபாண்டி என்பவருடன் தண்டையார்பேட்டை முருகன் கோயிலில் கடந்த 4.9.2021 அன்று திருமணம் நடந்து இருப்பது தெரியவந்தது.

முதல் திருமணத்தை மறைத்து சட்டவிரோதமாக என்னை 2வது திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார். திருமணத்திற்கு எனது குடும்பத்தினர் அதிகளவில் கடன் பெற்று, தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, என்னை ஏமாற்றிய காவலர் ராஜலட்சுமி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது திருமணத்திற்கு நாங்கள் கொடுத்த நகைகள் மற்றும் திருமணத்திற்கு செய்த செலவுகளை திரும்ப பெற்று தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது பெண் காவலர் ராஜலட்சுமியிடம் திருமணம் மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதல் திருமணத்தை மறைத்து என்னை ஏமாற்றிவிட்டார்; கீழ்ப்பாக்கம் பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2வது கணவன் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Kilpakkam ,Chennai ,Dinakaran ,
× RELATED போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!