×

செங்கல்பட்டு மாவட்டத்தில் உலமாக்கள் பைக் வாங்க மானியம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, உலமாக்கள் பைக் வாங்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியை சிறப்பாக செயல்படுத்துவதற்கு வசதியாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 % சதவீதம் இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் குறைந்தப்பட்சம் 5 ஆண்டுகள் வக்பு நிறுவனங்களில் உலமாக்களாக பணியாற்றியிருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம், விண்ணபிக்கும்போது எல்.எல்.ஆர் சான்று பெற்றிருக்க வேண்டும், மாவட்டத்தில் ஒரே பள்ளிவாசலில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் பேஷ் இமாம், அராபி ஆசிரியர்கள், மோதினார், முஜாவர் என்று முன்னுரிமையின் அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படும்.

ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, வருமான சான்று, வயது சான்றிதழ், புகைப்படம், சாதிச்சான்று, மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதிகாரியிடம் சான்று, ஒட்டுனர் உரிம்ம், எல்.எல்.ஆர் சான்று, வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் கையொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வாகன விலைப் பட்டியலை இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் உலமாக்கள் பைக் வாங்க மானியம் appeared first on Dinakaran.

Tags : Ulemas ,Chengalpattu district ,Chengalpattu ,Rahul Nath ,Ulamas ,Dinakaran ,
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...