புதுடெல்லி: கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மணிப்பூர் கலவரம், ராஜஸ்தான் பலாத்கார கொலை தொடர்பாக மக்களவையில் நேற்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி ஏற்பட்டது. அப்போது மக்களவையில் முக்கியமான சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் மணிப்பூர் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. மீண்டும் அமளி தொடர்ந்ததால் மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதம் நடத்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கையை முன்வைத்தார். இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையை நாள் முழுவதும் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஐஐஎம்களின் நிர்வாகப் பொறுப்பு அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கு நிதியளிப்பதற்கான தேசிய நிறுவனத்தை அமைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தனியார் துறையின் கணிசமான பங்களிப்போடு, ஆராய்ச்சி களை ஊக்கப்படுத்த ரூ.50,000 கோடி நிதி கிடைக்க உதவும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா நிறைவேறியது. பாதுகாப்பு படையில் மற்றப் படைகளைச் சேர்ந்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமைத் தளபதி க்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
* அமைதியாக இல்லாவிட்டால் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் மிரட்டிய ஒன்றிய அமைச்சர்
டெல்லி சேவைகள் மசோதா தொடர்பாக விவாதம் நேற்று முன்தினம் மக்களவையில் நடந்த போது ஒன்றிய இணை அமைச்சர் மீனாட்சி லெகி பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் குறுக்கிட்டு டெல்லி சேவை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த மீனாட்சி லோகி, ‘வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள்; இல்லையென்றால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும்’என எச்சரித்தார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேச்சுக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
The post கடும் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடங்கியது appeared first on Dinakaran.