×

ராமாபுரத்தில் பரபரப்பு 8 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது

பூந்தமல்லி: ராமாபுரத்தில் 8 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பூத்தபேடு பகுதியை சேர்ந்தவர் வினோத்(38), இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்த பெண்ணுக்கு 15 வயதில் பெண் ஒன்று உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவி திடீரென மாயமானார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து அந்த வாலிபரின் செல்போனை வைத்து போலீசார் கண்காணித்தனர். அப்போது மாயமான மாணவி ராமாபுரத்தில் இருந்து அந்த வாலிபருடன் அவரது சொந்த ஊரான மன்னார்குடிக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்களை பின்தொடர்ந்து சென்று மீட்டனர். பின்னர் இருவரையும் ராமாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். மாணவியிடம் அவர் தவறாக நடந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின்பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வாலிபரோ மாணவியிடம் தவறாக நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாணவியின் தாயுடன் குடும்பம் நடத்தி வந்த வாலிபர் வினோத் என்பவர் மாணவி நான்காவது படித்துக் கொண்டிருந்த போதே மிரட்டி கடந்த 8 ஆண்டுகளாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதனை மாணவி போலீசாரிடம் கூறி கதறி அழுதார். இந்த நிலையில் வாலிபரை காதலித்து வந்த நிலையில் இதன் காரணமாகவே வீட்டில் இருக்க பிடிக்காமல் கடிதம் எழுதி வைத்திவிட்டு வாலிபருடன் சென்றதாகவும் மாணவி தெரிவித்தார். சிறுமியின் தாய் ஐந்து மாத கர்ப்பமாக இருந்த போது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு வினோத்துடன் பழக்கம் ஏற்பட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த நிலையில், மாணவி பிறந்துள்ளார்.

இப்படி குழந்தையில் இருந்தே வளர்த்த பிள்ளையைத்தான் சிறுமியான பின்னர் வினோத் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து மோசம் செய்திருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் வினோத்தால் தனக்கு ஏற்பட்ட செக்ஸ் கொடுமைகள் பற்றி மாணவி விரிவாக எழுதி உள்ளார். இந்த கடிதத்தை முக்கிய ஆதாரமாக கைப்பற்றிய போலீசார் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியை அழைத்துக் கொண்டு சென்ற வாலிபரிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்தனர்.

The post ராமாபுரத்தில் பரபரப்பு 8 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pokso ,Poontamalli ,Ramapuram ,Bokso ,Valasaravakkam… ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ