×

ஒரு சிறிய சறுக்கலில் இருந்து தற்போது மீண்டு, அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளேன்: அன்வர் ராஜா பேட்டி

சென்னை: ஒரு சிறிய சறுக்கலில் இருந்து தற்போது மீண்டு, அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளேன் என்று அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, மீண்டும் அதிமுகவில் இணைந்தார். சென்னையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் அன்வர் ராஜா இணைந்தார். கட்சியை வலுப்படுத்த சசிகலாவை அதிமுகவில் இணைக்கலாம் என்று கூறியதால் 2021-ல் அன்வர் ராஜா நீக்கப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு வந்தேன்:

ஓராண்டுக்கு முன்னர் நீக்கப்பட்டேன். இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். ஒரு சிறிய சறுக்கலில் இருந்து தற்போது மீண்டு, அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளேன். கட்சியின் கொள்கைகளுக்கு உடன்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் நான் கட்சியின் அனைவருடனும் தொடர்பில் தான் இருந்தேன். விலகி இருந்தாலும் கட்சியினரின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தேன், என்னை யாரும் தடுக்கவில்லை.

பாஜக மீதான விமர்சனம் வேறு; கூட்டணி என்பது வேறு. இந்தியாவில் காங்கிரஸை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தனர். கொள்கைக்கு இடர்பாடு ஏற்படுமானால் எந்த கூட்டணியாக இருந்தாலும் அதிமுக வெளியேற தயங்காது. நாடாளுமன்றத்தில் தான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என அன்வர் ராஜா தெரிவித்தார்.

பாஜகவினர் ஊடகத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்: அன்வர் ராஜா

விளம்பரத்தாலே உயர்ந்தவர் வாழ்க்கை நிரந்தரமாகாது என கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். தற்போது விளம்பரம், ஊடகத்தை வைத்து பாஜகவினர் அரசியல் செய்கிறார்கள்; அது நிலைக்காது. இன்றைக்கும் கூட பாஜகவினர் அதிமுகவை விமர்சிக்கிறார்கள்; கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது 2 கட்சி தலைவர்கள் தான் என்று அன்வர் ராஜா குறிப்பிட்டார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரனை சேர்ப்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும். ராமநாதபுரத்தில் யார் போட்டியிடுவது என 2 கட்சி தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள் என்று அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜகவிற்கு வாக்கு கேட்பேன்:

ராமநாதபுரத்தில் யார் போட்டியிட்டாலும் அவர்கள் வெற்றிக்காக பாடுபடுவேன். ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டால், அக்கட்சிக்கு வாக்குசேகரிப்பேன். தேர்தல் முடிவுக்கு பிறகுதான் சிறுபான்மையினர் வாக்கு பாஜகவிற்கு கிடைத்ததா என்பது தெரியும் என்று அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

The post ஒரு சிறிய சறுக்கலில் இருந்து தற்போது மீண்டு, அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளேன்: அன்வர் ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Atimukha ,Anwar Raja ,Chennai ,Akhimukh ,Anwar king ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!