×

மனைவி நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் 8 வயது மகளை கழுத்தறுத்து துடிதுடிக்க கொன்ற தந்தை: வில்லிவாக்கத்தில் பரபரப்பு

அண்ணாநகர்: மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால், தனது 8 வயது மகளை கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்த தந்தை, போலீசில் சரணடைந்தார். இச்சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வில்லிவாக்கம், செங்குன்றம் சாலை, 5வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (34). இவரது மனைவி லாவண்யா (32). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு வதனஸ்ரீ (8) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். அருகில் உள்ள தனியார் பள்ளியில் வதனஸ்ரீ 4ம் வகுப்பு படித்து வந்தாள். மனைவியின் நடத்தை மீது ராதா கிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கடந்த 5 மாதங்களுக்கு முன், ராதாகிருஷ்ணனை பிரிந்த லாவண்யா, தனது 2 குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவ்வப்போது லாவண்யாவை ராதாகிருஷ்ணன் செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். ஆனால், லாவண்யா இதற்கு மறுத்துள்ளார்.  கொரோனா ஊரடங்கு காரணமாக தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், லாவண்யா தினசரி வேலைக்கு செல்லும்போது, தனது 2 குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மனைவி வீட்டுக்கு ராதாகிருஷ்ணன் வந்துள்ளார். அங்கு, லாவண்யா வேலைக்கு சென்று இருந்ததால், மகள் மற்றும் மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, மகள் வதனஸ்ரீயிடம், லாவண்யாவின் நடத்தை குறித்து ராதாகிருஷ்ணன்  விசாரித்துள்ளார். அதற்கு பதில் கூறத் தெரியாததால் வதனஸ்ரீ அமைதியாக இருந்தாள். இதையடுத்து, மகன் மற்றும் மகளை தன்னுடன் வரும்படி ராதாகிருஷ்ணன் அழைத்துள்ளார். அதற்கு, மகள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் வதனஸ்ரீயின் கழுத்தை அறுத்ததுடன், வயிறு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் ராதாகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் லாவண்யாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். மேலும், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே அவள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வந்த லாவண்யா, மகள் சடலத்தை பார்த்து கதறி அழுதார். தகவலறிந்து வந்த வில்லிவாக்கம் போலீசார், சிறுமி வதனஸ்ரீயின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, தலைமறைவான ராதாகிருஷ்ணனை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் சரணடைந்தார். அவரிடம் விசாரித்ததில், என் மனைவி நடத்தை மீதான சந்தேகம் குறித்து விசாரிக்க வந்தேன். வீட்டில் மனைவி இல்லாததால் மகளிடம் கேட்டபோது பதில் கூறாத ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டேன் என ராதாகிருஷ்ணன் அழுதபடி வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post மனைவி நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் 8 வயது மகளை கழுத்தறுத்து துடிதுடிக்க கொன்ற தந்தை: வில்லிவாக்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Williwak ,Annanagar ,
× RELATED 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் எஸ்கேப்