×

நித்திரவிளை அருகே கார் திருட்டு வழக்கில் கைது நெஞ்சு வலிப்பதாக கூறி நாடகமாடி போலீசை பதற வைத்த வாலிபர் மருத்துவ பரிசோதனையில் குட்டு அம்பலம்

நித்திரவிளை, ஆக.3 : நித்திரவிளை அருகே கார் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி நடத்திய நாடகத்தால் போலீசார் பதற்றம் அடைந்தனர். திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள கருமானூர் பகுதியை சேர்ந்தவர் சுஜின் (33). கேரளாவில் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இவர் தனக்கு சொந்தமான காரை தனது நண்பரான குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பணமுகம் பகுதியை சேர்ந்த அனில்மோன் (32) என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார். அனில்மோன் ஆலவிளை பகுதியில் காரை நிறுத்தி இருந்த போது கடந்த 30ம் தேதி இரவு மர்ம நபர்கள் காரை திருடி சென்றனர். இது சம்பந்தமாக சுஜின் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் கடந்த 31ம்தேதி, சம்பந்தப்பட்ட கார் காப்புக்காடு அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நிற்கும் தகவல் தனிப்படை போலீசுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் விரைந்தனர். காரில் இருந்த 3 பேர் தப்பினர். 16 வயது சிறுவன் மட்டும் பிடிபட்டான். அவனிடம் நடந்த விசாரணையில் கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்தவன் என்பதும், சிறுவன் மற்றும் அவரது சகோதரர் அஜித் (21), பாறசாலையை சேர்ந்த சரத் (20) மற்றும் மேலும் ஒரு 17 வயது சிறுவன் என 4 பேர் சேர்ந்து காரை திருடியது தெரிய வந்தது. பிடிபட்ட 4 பேரில் 2 பேர் சிறுவர்கள் என்பதால், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மீதி 2 பேர், நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களிடம் நித்திரவிளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்தது. அப்போது சரத் நெஞ்சை பிடித்தவாறு மயங்கினார்.

இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்பதால், உடனடியாக சரத்தை, போலீசார் அவசர, அவசரமாக ஜீப்பில் ஏற்றி, முதலில் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், இதய துடிப்பு சரியாக இருக்கிறது என்றே கூறினார். இருந்தாலும் நெஞ்சு வலி உள்ளதாக சரத் கூறியதால் பயந்து போன போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இசிஜி உள்ளிட்ட அனைத்து வகையிலான பரிசோதனையும் நடந்தது. அனைத்தும் நார்மலாகவே இருந்தன. இதையடுத்து டாக்டர்கள், சரத்திடம் உண்மையை சொல். என்ன செய்கிறது என கேட்ட பிறகே போலீசை ஏமாற்ற நெஞ்சு வலிக்கிறது என நாடகமாடியது தெரிய வந்தது. நாடகம் என்பது தெரிந்த பிறகு தான் போலீசாருக்கும் படபடப்பு அடங்கியது. பின்னர் அவரை போலீசார் எச்சரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறைக்கு கொண்டு சென்றனர்.

The post நித்திரவிளை அருகே கார் திருட்டு வழக்கில் கைது நெஞ்சு வலிப்பதாக கூறி நாடகமாடி போலீசை பதற வைத்த வாலிபர் மருத்துவ பரிசோதனையில் குட்டு அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Nithravilai ,Natakmati ,Natakamadi ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க சுவர் கட்டும் பணி நிறைவு