×

நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு வாயிலில் நிறுத்தி சந்தேகம்படும் படியான வாகனங்களை மோப்பநாய் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டு வருகின்றனர். மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் கார்களை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிடுகின்றனர். இதேபோன்று விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான சோதனைகளுடன் விமானத்தில் ஏறும் இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

குறிப்பாக கையில் எடுத்து வரும் பைகளை திருவி திருவி சோதிக்கின்றனர். திரவ பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்றவற்றை கையில் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சோதனை காரணமாக பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் வர அறிவுத்தப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதி முறைகள் அமலில் இருக்கும் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : 76th Independence Day ,Chennai Airport ,Chennai ,
× RELATED சென்னை விமான நிலையம் முதல்...