
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு ரூ.1.82 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். கலெக்டர் கலைச்செல்வி மோகன் முன்னிலை வகித்தார். இதில், அனைத்துத்துறை அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை வாரியாக பிரித்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் நேற்று மனுக்கள் பெறப்படுகின்றது.
இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்க கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் பெறப்பட்ட 217 மனுக்களில், முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும்.
குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரிசெய்ய வேண்டும், மின் கம்பங்களை மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின்னழுத்த திறன் கொண்டு இருப்பதை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நமக்கு தெரியாத சில பிரச்னைகள் மற்றும் மக்களின் தேவைகளை நேற்று மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு, அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் மற்றும் 3 மாற்றுத்திறனாளிக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், கல்வித் துறை சார்பில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 4 பள்ளிகளுக்கு சிறப்பு பரிசளிப்பு தொகைக்கான காசோலை, கூட்டுறவுத் துறை சார்பில் 5 மகளிர் சுயஉதவி குழுகளுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக்குழு கடன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு, ரூ.107.16 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு வங்கி கடன் இணைப்பு திட்டத்திற்கான நலதிட்ட உதவி என ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், திருப்பெரும்புதூர் ஒன்றிய குழுத்தலைவர் கருணாநிதி, மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post காஞ்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பயனாளிகளுக்கு ரூ.1.82 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.