×

தமிழ்நாடு அரசு சார்பில் நன்னன் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், ‘நன்னனுக்குப் புகழ் சேர்த்திடும் வகையில், நன்னனின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் நேற்று நடைபெற்ற பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: பேராசிரியர் நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பேராசிரியர் நன்னனின் நூற்றாண்டு விழாவை, புத்தக வெளியீட்டு விழா, மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஆகியவற்றோடு இணைத்து ஏற்பாடு செய்துள்ள நன்னன் குடி அமைப்புக்கு என்னுடைய வாழ்த்துகள்.

அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ‘அகமும் புறமும்’ என்று தலைப்பு வைத்து முன்பு வெளியிட்டேன்.புலவர் நன்னன் அகமும் புறமும் அப்பழுக்கற்றவராக, நேர்மையானவராக விளங்கியவர். அவருக்கு நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம். தந்தை பெரியார், தலைவர் கலைஞரை போல புலவர் நன்னனும் அவர்களும் 90 ஆண்டுகளை கடந்து வாழ்ந்தவர். வாழ்நாளெல்லாம் நாட்டுக்காக, மொழிக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருப்பதுதான் முக்கியமானது. அது எல்லோராலும் முடியாது. தந்தை பெரியாரைப் போல, கலைஞரைப் போல, நன்னனைப் போல ஒரு சிலரால் தான் முடியும்.

நன்னன் எழுதிக் கொண்டே இருந்தார். எனக்கு என்ன பெருமை என்று சொன்னால், புலவர் நன்னனின் விரலுக்கு, விழுப்புரத்தில் நடைபெற்ற இளைஞரணி பாசறை கூட்டத்தில் மோதிரம் அணிவித்தவன் நான். அதனை இன்றைக்கும் நினைத்து பெருமையாக கருதிக் கொண்டிருக்கிறேன். நவம்பர் மாதம் 7ம் நாள் நன்னன் மறைந்தார். மறைந்தார் என்று சொல்ல முடியாது. அவர் மறைந்த பிறகும், புத்தகங்கள் அவர் பெயரால் வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், எழுத்தால், சிந்தனையால், செயலால் நன்னன் வாழ்கிறார். தொடர்ந்து அவர் வாழ்வார்.

ஒன்றல்ல இரண்டல்ல, 124 புத்தகங்களை நமக்காக உருவாக்கிக் கொடுத்துச் சென்றிருக்கிறார் நன்னன். இந்த நூல்களை நன்னன் குடி அமைப்பு வெளியிட்டுள்ளது. நன்னன் குடி என்றால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, நாம் அனைவரும் நன்னன் குடியைச் சேர்ந்தவர்கள் தான்.திமுக பொதுக்குழு நடந்தால், செயற்குழு நடந்தால் முதல் வரிசையில் வந்து உட்கார்ந்திருப்பார். முக்கியமான புத்தக வெளியீட்டு விழா என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று சொன்னால், அந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பார். 100 ஆண்டு வரலாற்றை 10 நிமிடத்தில் அனைவருடைய மனக்கண் முன்னால் நிறுத்தி பேசக்கூடிய ஆற்றல் அவருக்குதான் உண்டு. இதுதான் அவரது பாணி.

அந்த விழாவில் தான் தலைவர் கலைஞர் அவர்கள் பேசும் போது குறிப்பிட்டார்கள். ‘13 வயதில் தமிழ்க் கொடி ஏந்திப் போராடியவன் இந்தக் கருணாநிதி, இன்றைக்கும், அந்தக் கருணாநிதியினுடைய பரம்பரை, கருணாநிதியுனுடைய வழித்தோன்றல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இருக்கிற காரணத்தால் ஒரு கருணாநிதி போனாலும், பல கருணாநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க வந்து கொண்டே இருப்பார்கள்” என்று பேசினார். அத்தகைய கலைஞரின் பரம்பரையினராக, வழித்தோன்றல்களாக நாம் இன்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். கலைஞரின் வாரிசு என்றால் நான் மட்டுமல்ல, திராவிடக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய அனைவரும் கலைஞரின் வழித்தோன்றல்கள் தான். இந்த வழித் தோன்றல்கள்தான் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அடக்குமுறைக்கு வழித்தோன்றல்கள் இருப்பதைப் போல, விடுதலை இயக்கத்துக்கும் வழித்தோன்றல்கள் எப்போதும் இருப்பார்கள். தனக்கென ஒரு எழுத்து நடையை, பேச்சு நடையை நன்னன் வைத்திருந்தார்.

திமுக நடத்திய தனது முப்பெரும் விழாவில் நன்னனுக்கு தந்தை பெரியார் விருது வழங்கியது. இந்தியாவையே கபளீகரம் செய்ய சனாதன, வர்ணாசிரம சக்திகள் துடித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தந்தை பெரியாரின் எழுத்துக்களை 21 மொழிகளில் கொண்டு வர நாம் முன்னெடுப்புகளைச் செய்து கொண்டு வருகிறோம்.தமிழ்நாட்டுக்கு ஒரு பெரியார் இருந்ததைப் போல, மற்ற மாநிலங்களுக்கு இல்லை. எங்களுக்கு ஒரு தந்தை பெரியார் இல்லையே, திராவிட இயக்கம் இல்லையே என்ற ஏக்கம் இன்றைக்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் வந்திருக்கிறது.

சனாதனம், வர்ணாசிரமம் குறித்து நம்முடைய ஆளுநர் தினந்தோறும் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அவர் பேசுவது நமக்கு ஒரு பிரசாரமாக அமைந்திருக்கிறது. அது வேறு. நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். தொடர்ந்து அவரே இருக்கவேண்டும், இருந்தால்தான் நம்முடைய கொள்கைகளை நாம் வளர்க்கமுடியும். நம்முடைய பிரசாரத்தை நாம் சிறப்பாக செய்யமுடியும். தினந்தோறும் தவறான பாடங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார். அவர் பேசி வருவதே நமது கொள்கைகளுக்கு மிகப்பெரிய விளம்பரத்தைக் கொடுத்து வருகிறது. நன்னன், வாழ் நாளெல்லாம் கொள்கைக்காக வாழ்ந்தார். கொள்கையின் அடையாளமாகவே வாழ்ந்தார். தனது குடும்பத்தையையும், கொள்கையையும் இணைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

மரணம் நெருங்கும் போது எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது. நான் நிறைவாழ்க்கை வாழ்ந்து விட்டேன் என்றார். தனக்குப் பின்னால் தனது குடும்பம், தனது செயலைத் தொடர்ந்து செய்ய வழிகாட்டினார்.நன்னன் காலத்தைப் போலவே, புத்தக வெளியீடுகள் நடக்கின்றன. சமூக சேவை தொடர்கிறது. விழாக்கள் நடக்கின்றன. நன்னன் அவருடைய நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் இருக்கின்ற காரணத்தால், அந்தப் பெருமையோடு நான் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாடு அரசின் சார்பில் நன்னன் அவர்களுக்குப் புகழ் சேர்த்திடும் வகையில், நன்னனின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நன்னின் குடும்பத்தினரோ, உறவினர்களோ, வேறு யாரும் கோரிக்கைகளை இந்த நேரத்தில் வைக்கவில்லை. யாரும் வைக்காமல் இந்த கோரிக்கையை நான் செய்கிறேன் என்று சொன்னால், நன்னன் குடியில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில், இந்த அறிவிப்பை செய்திருக்கிறேன். நன்னன் அவர்கள் காலமாகவில்லை, அவர் காலம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

The post தமிழ்நாடு அரசு சார்பில் நன்னன் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Nannan ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...